Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் குழுவினர் சந்தித்து, தேர்தல் ஒதுக்கீடு உடன்பாடு செய்து கொண்டனர். இதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் - விறுவிறுப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கியது. காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

முஸ்லீம் லீக், ம.ம.க. கட்சிகளுக்கு ஒதுக்கீடு
இந்த பேச்சுவார்த்தையில், முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதர கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி உடன் நீடித்த பேச்சு
காங்கிரஸ் தரப்பில், 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டதால், பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா? என்ற விவாதம் எழுந்தது.
வந்தார் ப.சிதம்பரம்
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் பேசி, உடன்படிக்கையை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழி காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்த தொகுதி பங்கீட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

முடிவுக்கு வந்த பேச்சுவார்த்தை
இந்த நிலையில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு வந்தார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, திமுக வழங்கிய 28 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர். திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா உடன் இருந்தனர்.

தொடரும் பேச்சுவார்த்தை
இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலை போல் 6 இடங்கள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாலும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாலும் முடிவு ஏற்படவில்லை. மக்கள் நீதி மய்யம் 3 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி வழங்கப்படும், உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. ஆகவே, திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.