Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 12:25 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை
தமிழகத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்டப் பணிகள் குறித்து விவாதிக்க திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று, மார்ச் 16ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வந்தார் துரைமுருகன்
கடந்த சில நாட்களாக, உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், இன்றைய கூட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்றார். கூட்டத்திற்கு வருகை தந்தபோது செய்தியாளர்களைப் பார்த்து கையசைத்த துரைமுருகன், “வந்துட்டேன்யா, வந்துட்டேன்யா” என்று, உற்சாகமாக கூறிச் சென்றார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து கிளம்பிய துரைமுருகனிடம், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த துரைமுருகன், “திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved