Also Watch
Read this
அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்ப்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைய முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

முதல்வர் விஜய் ஆய்வு
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று மே 12ஆம்தேதி, தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சீரான குடிநீர் விநியோகம்
இக்கூட்டத்தில் விரிவான ஆய்விற்குப் பின்னர், தமிழ்நாடு முதல்வர் விஜய், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்ப்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடு செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

முன்னேற்பாடுகள் மேற்கொள்ள...
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் திங்கள்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ள தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved