Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன.
17ஆவது ஆசிய கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிந்த நிலையில், நடைபெற்ற சூப்பர்-4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, வங்க தேசத்தை எதிர்கொண்டது.

இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணியின் அதிரடி பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, பாகிஸ்தானின் அசத்தல் பந்து வீச்சால் சுருண்டது. இறுதியாக, 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் விறுவிறுப்பான இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது.

வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 41 ஆண்டுகளில் ஒருமுறை கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதியது இல்லை. தற்போது இந்த அணிகள் மோத உள்ளதால் இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.