Also Watch
Read this
மாற்றம் என்ற சொல்லை மையமாக வைத்து தேர்தலைச் சந்தித்தவர்கள், எம்எல்ஏக்களின் குரலை நசுக்குவது தான் மாற்றமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சபாநாயகருக்கு கடிதம்
ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ராஜ்மோகன் கூறியதும் நடந்ததும்
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என்று, அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டு உள்ளது.
நேரலை துண்டிப்பு, இருட்டடிப்பு
மேகதாது அணை கட்டுவதை கண்டித்து முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது. மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும், சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.

வீடியோ எடிட் செய்யப்பட்டு...
எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நசுக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
இதுதான் மாற்றமா?
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்து தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவது தான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும். இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட முதலமைச்சர் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.

உடனடி நடவடிக்கை வேண்டும்
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். திங்கட்கிழமையன்று 22ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்கு பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்ட மன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved