Also Watch
Read this
By: Web Team

துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் சுதர்ஷன் ரெட்டி குறித்து தெரிந்து கொள்வோம்...
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்த விவரங்கள்:
அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகராகத் தொடங்கி, 1974இல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்.
தென்னிந்தியாவில், பாஜகவின் வளர்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1996இல், தமிழ்நாட்டில் பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 1998 மற்றும் 1999 என தொடர்ச்சியாக 2 முறை கோவை மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு, சி.பி.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.
இவர், 2004 முதல் 2007 வரை தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இந்த பொறுப்பில் இருந்த போது 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார்.
தொடர்ந்து, 2004, 2014 மற்றும் 2019 என 3 முறை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை கூடுதல் பொறுப்பாகவும் கவனித்து வந்தார்.
அதன் பிறகு மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள சுதர்ஷன் ரெட்டி குறித்த விவரங்கள்:
தற்போதைய தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் அகுலா மைலாரம் என்ற கிராமத்தில், ஒரு விவசாய குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தவர் சுதர்ஷன் ரெட்டி.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற சுதர்ஷன் ரெட்டி, 1971, டிசம்பர் 27ஆம் தேதி ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
ஆந்திர பிரதேசத்தில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளை கையாண்ட சுதர்ஷன் ரெட்டி, 1988-90ஆம் ஆண்டுகளில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
கடந்த 1990ஆம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக சுமார் 6 மாத காலம் பணியாற்றிய இவர், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1995, மே 2ஆம் தேதி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2005 டிசம்பர் 5ஆம் தேதி கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2007 ஜனவரி 12ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்ஷன் ரெட்டி, 2011 ஜூலை 8ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
கோவா மாநில முதல் லோக் ஆயுக்தா நீதிபதியாக 2013ல் சுதர்ஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் சில மாதங்களில் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved