Also Watch
Read this
தவெக கூட்டணியில், மதிமுக இணைந்ததில் இருந்து திமுகவையும், விசிகவையும் ஒரே தராசில் வைத்து பாரபட்சம் பார்க்காமல் வைகோ விமர்சனம் செய்து வரும் நிலையில், ஒரே வார்த்தையில் அவரது ஆவேசத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார் நாஞ்சில் சம்பத். முதலமைச்சர் விஜய்யின் காலில்தான் வைகோ விழுந்து கிடப்பதாக நாஞ்சில் சம்பத் சிதறு தேங்காயைபோல் உடைத்துப்பேசுவார் என சற்றும் எதிர்பார்க்காத மதிமுகவினர், ஒருபக்கம் வாயடைத்துப்போய் உள்ள நிலையில், மறுபக்கம் ஒருவார்த்தை பேசினாலும் திருவார்த்தை பேசி உள்ளார் என விசிகவினர் அமைதி ஆனந்தத்தில் உள்ளார்களாம்.

வைகோவின் பேச்சு...
போகிற போக்கை பார்த்தால் ”ஐயா நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என வைகோவை பார்த்து தவெகவினர் கெஞ்சத்தான் வேண்டும்போல...
ஆட்சியமைக்க அல்லாடிய நேரத்தில் ஆதரவுக்கட்சிகளின் ஆறுதல் பார்வையால் ஆட்சியை பிடித்தது தவெக. அதன்பிறகு, வெளியிலிருந்து ஆதரவு இல்லை, தவெக அமைச்சரவையிலேயே இடம்பிடிக்கிறோம் எனக்கூறி சில கட்சிகள் கூட்டணியில் இணைந்தது தனிக்கதை.

இதில், விசிக தலைவர் திருமாவளவன் திமுகவுடன் நட்பாக இருப்பதாகவும், அந்த கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறவில்லை எனவும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார். அதனைகூட சமாளித்துவிடலாம். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து டோட்டலாக அவுட் ஆகி தவெக கூட்டணியில் இன் வைத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை வாங்கு வாங்கு என வாங்கி வருவது ஒருபுறம் என்றால் தவெக பக்கம் இருக்கும் விசிகவையும் பாரபட்சம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு கேள்விகளால் தீட்டு தீட்டு என தீட்டி வருகிறார்.

விசிகவை சீண்டும் வைகோ
திமுக கூட்டணியில் இருந்தபோது அக்கட்சியினரை தொட வேண்டுமென்றால் முதலில் தன்னை தொட வேண்டுமென நெஞ்சை நிமிர்த்திய வைகோ, அதில் இருந்து வெளியேறி தவெகவிற்கு வந்ததும் அதேபோன்று வீரவசனத்தை குறைவில்லாமல் பொழிகிறார்.. ”மொத்தத்தில் வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை” என்பதுதான் வைகோவின் வழியே. அவரது வழிப்படியே வந்தாலும் திமுகவை தாக்கலாம், தவெகவைகூட புகழ்ந்துபாடி ஸ்கோர் செய்யலாம், ஆனால், என்னதான் பட்டும் படாமலும் பேசி வந்தாலும் தற்போதுவரை தவெக பக்கமே நின்று கொண்டிருக்கும் விசிகவை சீண்டுவதுதான் என்ன திட்டம் என்பது புரியவில்லை.

விசிக பக்கம்...
மாற்றி மாற்றி பேசும் திருமாவளவனுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என வம்பிழுத்து, அதன்பிறகு வாபஸ் பெற்ற வைகோ, கடந்த 3 நாட்களுக்கு முன்புகூட முதலமைச்சர் விஜய் மீது கூட்டணிக்கட்சிகளே விஷக்கணைகளை வீசுவதாக பாய்ந்திருந்தார். அந்த கூட்டணி கட்சி வெளிப்படையாக விசிகதான் என சொல்லாவிட்டாலும் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களுக்குகூட வைகோவின் BALL சிறுத்தைகள் பக்கம்தான் பாய்கிறது என்பது புரியும்.

அமைச்சர் வன்னியரசு பதிலடி
வைகோ தங்களை நேரடியாக சொல்லவில்லையென அமைச்சர் வன்னி அரசு தனக்குத்தானே ஆறுதல் வார்த்தை சொல்லிக்கொண்டாலும் போர்வாளுக்கான பதிலடியையும் கொடுக்க தவறவில்லை. திமுக ஆட்சியில் இருந்துபோது அந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை விசிக நடத்தியது வைகோவுக்கு தெரியுமா? தெரியாதா?

திமுக அரசுக்கு எதிராக அவர் ஒரு போராட்டம் நடத்தி இருப்பாரா? என கேள்வி எழுப்பிய வன்னி அரசு, வைகோ அவரது மதிப்பையும், மரியாதையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றார். தவெக என்ற ஒற்றைப்படகில் இருந்துகொண்டு தோணியோடு தோணியாக இருக்காமல் விசிகவை வைகோ சீண்ட, திருமாவும், வன்னி அரசுவும் சிரித்தபடியோ அல்லது மென்மையாகவோ பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தவெகவில் நாஞ்சில்சம்பத்...
திருமாவளவனை நோக்கியே தனது விமர்சன ஃபோகஸை வைத்திருந்த வைகோ, மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து தற்போது தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள நாஞ்சில் சம்பத், விசில் கூடாரத்தில் இருப்பதை மறந்தேவிட்டார்.

வைகோவின் அத்தனை வித்தைகளையும் ஏற்கெனவே கரைத்து குடித்துள்ள நாஞ்சில் சம்பத், வைகோவை ஒரே ஒரு வார்த்தையில் வீழ்த்தி வாஷ்அவுட் செய்துள்ளார். மதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகும் வைகோ மீது நாஞ்சில் சம்பத்திற்கு கோபம் இருந்ததாகவும், அதற்கான நேரம் பார்த்து காத்திருந்ததாகவும் அரசியல் வட்டாரம் தரப்பில் ஏற்கெனவே அடிபட்டது. அந்த வாய்ப்பை விழுப்புரத்தில் பேசியபோது பயன்படுத்திக் கொண்டார் நாஞ்சில் சம்பத்.

தவெக தலைவர் விஜய் காலடியில்...
ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் தமிழ்நாட்டு மக்களின் கனவு, 1994ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி அரசியல் மாற்றத்திற்கு அகரம் எழுதினார் வைகோ, அவராலேயே அதனை செய்ய முடியவில்லை, இன்று அவரே எங்கள் கட்சித் தலைவர் விஜயின் காலடியில் வந்து விழுந்து கிடக்கிறார் என மைல்டாக கிண்டலடித்துள்ளார்.

இந்த கருத்தை நாஞ்சில் சம்பத் கூறியதை உற்றுநோக்கினால் இதனை சொல்ல பல நாட்களாக காத்திருந்தது போன்றுதான் இருந்தது. எவ்வளவு பெரிய போராளி, அவரையே அடுத்தவர் காலில் விழுந்து கிடப்பதாக கூறுவதா? என மதிமுகவினர் ஒருபக்கம் ஆத்திரப்பட்டாலும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தானே என விசிகவினர் உள்ளம் குளிர்கிறார்களாம்.