Also Watch
Read this
ஒரு ட்ரில்லியன் டாலர் Economy என்று கூறிக்கொண்டு இருந்த மாநிலத்தை ஷோபா மாடல் என்று சொல்ல வைத்தது தான் முதலமைச்சர் விஜய் சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கோட் சூட் போட்டதெல்லாம் பிரச்சனை இல்லை என்றும், அனைத்திலும் கோட்டை விடுவது தான் பிரச்சனை என்றும் சாடினார்.

'மாயாஜால கவர்ச்சி ஆட்சி'
இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. அமைச்சர் ஒருவர், தான் சுற்றுச்சூழல் அமைச்சரா அல்லது சுற்றுலாத் துறை அமைச்சரா என்று கேட்கும் அவல நிலை இந்த ஆட்சியில் நீடிக்கிறது. 'ஒரு கோமாளி அரண்மனைக்குச் செல்வதால் அவன் அரசன் ஆகிவிட மாட்டான். அந்த அரண்மனை தான் சர்க்கஸ் கூடாரமாக மாறும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த ஆட்சியில் பல கோமாளிகள் இணைந்து, ரம்மியில் வரும் ஜோக்கரை போல செயல்படுகிறார்கள். இதனைத் தான் நம்முடைய தலைவர் 'மாயாஜால கவர்ச்சி ஆட்சி' என்று விமர்சித்தார்.

ஷோபா மாடல் அரசு
திராவிட மாடல், ஒன் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று பெருமையோடு நகர்ந்த தமிழ்நாட்டை, இன்று 'ஷோபா மாடல்' அரசாக மாற்றிய பெருமை தான் இவர்களைச் சேரும். முதலமைச்சர் திருச்சிக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார். இடைத்தேர்தல் பிரச்சாரத்தை மனதில் வைத்துச் சென்றவர், எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. 'நல்லா வாயில் வருது...' எனப் பேசிய முதல்வர் எப்போது பார்த்தாலும் 'தி.மு.க Vs த.வெ.க' என்று பேசுகிறாரே தவிர, மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களோ, வார்த்தைகளோ வரவில்லை. நம் டி.ராஜேந்தர் பாணியில் 'தூரசக்தி, பாறசக்தி, ஓரசக்தி' என முதலமைச்சர் ரைமிங்காக டயலாக் பேசுகிறார்.

உண்மையான பெரியாரியவாதி?
தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து கொள்கையை கூறி, வாக்கு கேட்டாரா? தன் கட்சி வேட்பாளர்களின் பெயர் கூட அவருக்குத் தெரியாது. இதனால்தான் இதனைச் 'ரீல்ஸ் மற்றும் கவர்ச்சி அரசியல்' என்கிறோம். புதிய முதலமைச்சருக்குத் தன்னைப் பற்றியே எப்பொழுதும் சிந்திக்கும் 'போபியா' என்ற கற்பனையான பயம் இருக்கிறது. அவர் கோட் சூட் அணிவதைப் பற்றி நாங்கள் யாரும் எந்த விமர்சனமும் செய்யாத நிலையிலும், அவர் கருப்பு கோட் அணிவது பெரியாரின் கொள்கை என்று ஒரு புதிய விளக்கத்தை கொடுத்துக் கொள்கிறார். தனது ஜோசியரை அதிகாரப்பூர்வ அரசு ஆலோசகராக நியமிக்க முயன்று தோல்வி அடைந்தவர் தானே. அவரா உண்மையான பெரியாரியவாதி?

தொலைவில் இல்லை
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து ஆய்வு செய்ய நம்முடைய தலைவர் ஒரு குழுவை அமைத்து உள்ளார். அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தோல்வி மற்றும் வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் கட்சி நலன் கருதி தலைவர் நல்ல முடிவுகளை எடுப்பார். மீண்டும் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று நம் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் நாள் தொலைவில் இல்லை.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.