Also Watch
Read this
கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் சங்கடம் இருக்கத் தான் செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.

காயிதே மில்லத் பிறந்த தினம்
காயிதே மில்லத்தின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

காங். தலைவர் வருகை, கோஷம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்த நினைவிடம் அருகே வந்த போது, திமுக - காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில், சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை திமுகவினர் எழுப்பினர்.

இந்தியா கூட்டணியில் திமுக...
இதுகுறித்து, செல்வப்பெருந்தகை கூறியதாவது;
வருகிற ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியின் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறி இருப்பது, திமுகவின் விருப்பம், அக்கட்சியின் முடிவு. அதில் எந்த கருத்தும் கூற முடியாது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ள நிலையில், தவெகவுக்கு அழைப்பு விடுவது குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்யும், தமிழக குழு இதில் முடிவு எடுக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி மீது விமர்சனம்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. காயிதே மில்லத்தின் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும் இடத்தில் ஏற்பட்டது வெறும் குழப்பமே. இந்த விவகாரத்தை மேலும் கூர்மைப்படுத்த விரும்பவில்லை. நீண்ட கால கூட்டணியை விட்டுப் பிரிந்ததில் சங்கடம் இருக்கத்தான் செய்யும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved