Also Watch
Read this
By: Manigandan Raja
ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரின் 27ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது.

77 ரன்கள் குவித்து இஷான் கிஷன் அபார ஆட்டம்
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக இஷன் கிஷன், 40 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. 18 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் பாண்டியா, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாடு முழுவதும் களைகட்டிய கொண்டாட்டம்
டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், தேசியக் கொடிகளை ஏந்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா, டெல்லி, கொல்கத்தா, ஜம்மு&காஷ்மீர், கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் உற்சாகம் களை கட்டியது.

மைதானத்திற்கு வெளியே இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்
கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி மகுடம் சூடிய நிலையில், மைதானத்திற்கு வெளியே இந்திய ரசிகர்கள் தேசிய கொடியை ஏந்திக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போட்டியை நேரில் கண்டுகளிக்க நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இலங்கை வந்திருந்தனர். போட்டி முடிந்ததும் மைதானத்திற்கு வெளியே மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

மோசமான பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் காரணமாக தோல்வி
இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே மிகவும் மோசமாக இருந்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா வேதனையுடன் கூறினார். ஒட்டு மொத்த அணியும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாகவும், இது மிகவும் அவமானமான தோல்வி எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அடுத்து வரும் போட்டியில் கவனம் செலுத்தி தங்களை நிரூபிக்க முயற்சி செய்வோம் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மீண்டும் கை குலுக்காமல் சென்ற இந்தியா - பாக். கேப்டன்கள்
கொழும்புவில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கை குலுக்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இரண்டு கேப்டன்களுமே கை குலுக்காமல் சென்றனர். டாஸ் போட்ட பிறகு இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிய பிறகே பேட்டிங் அல்லது பீல்டிங்கை தேர்வு செய்யும் வழக்கம் இருந்து வரும் நிலையில், இருவரும் கண்டு கொள்ளாமல் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved