Also Watch
Read this
By: Web Team

உலகம் முழுவதும். இன்று பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு அடையாளமாக, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது;
பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான திமுக தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்கிற கம்பீரத்துடன் நின்று கொண்டிருக்கிறேன்.

அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை இன்று திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்கு பெருமையாக இருக்கிறது.
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி, தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவது, தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த பெருமை.
கடந்த 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள், இங்கு பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. இன்றைக்கு மீண்டும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது

தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல், சுயமரியாதை. “உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதை தான்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது, அதுதான் பெரியாரியம்.
பெரியாரியம் என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதசார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை என்று அறிமுகப்படுத்த வேண்டும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை, 'குடி அரசு' இதழில், பெரியார் எழுதினார்.
1. சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது.
2. ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் அனைவருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும்.
3. ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும்.
4. சாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும்.
5. அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த வேண்டும்.
6. யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடக்க, முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பெரியாரை பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சி பெற்று, வெகுஜன மக்களை ’கன்வின்ஸ்’ செய்து, அவர்களது ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி, சமுதாயத்தை மேன்மையடைய வைத்துள்ளது.
’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி, அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் அண்ணா. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கருணாநிதி.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதை சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி.

தமிழ்நாடு முதலமைச்சராக எத்தனையோ வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சி வயப்பட வைத்துள்ளது. காரணம், தந்தை பெரியார்.
பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
இதையும் கேளுங்கள்; ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் படம் திறப்பு | CM MK Stalin | DMK | Periyar
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved