Also Watch
Read this
தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ’தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது. அதிலும் பிரவீனின் செயலை அதிக பிரசங்கித்தனம் என சண்முகம் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி யார்?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போதே ஏடாகூடாமாக பேசி இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்த பிரவீன் சக்கரவர்த்தி, தற்போது அதே போன்றதொரு வேலையை பார்த்து தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், பொதுமக்களுக்கு பரீட்சயமானவர்கள் என்னவோ குறிப்பிட்ட சில பெயர்கள் தான். மாநில தலைவர் பதவியும் பெரும்பாலும் மியூசிக்கல் சேர் போலவே ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுற்றி வருபவர்களே அடைய முடியும். அப்படிபட்ட காங்கிரஸ் கட்சியில் பிரவீன் சக்கரவர்த்தி என்ற நபர் இருக்கிறார் என்பதே கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மக்களுக்கே தெரியவந்தது.

கூட்டணிக்குள் குழப்பம்
எவ்வித களப்பணியும் செய்யாமல் காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி கட்சியில் விறுக்கென வளர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி, தவெக தலைவர் விஜயை சந்தித்த பிறகே தமிழக அரசியலில் ஊடக வெளிச்சம் பெற்றார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே தவெக தலைவரை சென்று சந்தித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய பிரவீன், அவ்வப்போது திமுக அரசை சாடி குடும்பம் போல் இருந்த கூட்டணியில் பூதாகரத்தை கிளப்பி வந்தார்.இதன் விளைவாகவே இரு கட்சிகளுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், செல்வப்பெருந்தகையின் சாமர்த்தியத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை வெண்டிலேட்டர் உதவியுடன் நீடித்தது.

ராஜ்யசபா எம்பி ஆக...
ஒரு வழியாக தேர்தலுக்கு பின்னர், தான் ஆசைப்பட்டபடி தவெக காங்கிரஸ் கூட்டணியை கட்டமைத்த பிரவீன் சக்கரவர்த்தி, அதை பயன்படுத்தியே தவெகவின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்படவிருக்கிறார். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்து பிரவீன் சக்ரவர்த்தி வெளியிட்டிருந்த பதிவு, தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளை சீண்டி பார்த்திருக்கிறது. அதாவது, தவெக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டது தோழமை கட்சிகளிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

பெயர் வைத்த...
தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளில், காங்கிரஸை தவிர்த்து ஏனைய கட்சிகள் அனைத்தும் கூட்டணியில் இணையாமல் தோழமையுடனும், நட்பின் அடிப்படையிலும் மட்டுமே அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கியதோடு, திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிட்டதில்லை. உண்மை நிலவரம் இப்படி இருக்க பிரவீன் சக்கரவர்த்தி மட்டும் தன்னிச்சையாக தவெக தோழமைக் கட்சிகளை கூட்டணி வட்டத்திற்குள் வம்படியாக இழுத்து அதற்கு ஒரு பெயரையும் வைத்து அதிர்ச்சியூட்டியிருக்கிறார்.

அதிகபிரசங்கித்தனம்...
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ள கூட்டணியில் தங்களது கட்சி இல்லை என்றும், தமிழ்நாட்டில் மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு தந்துள்ளதாகவும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகமோ ஒரு படி மேலே சென்று, பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் தங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை என்ற சண்முகம், தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது என மீண்டும் தங்களது நிலைப்பாட்டை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved