Also Watch
Read this
கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த வழக்கு விவகாரத்தில், சிபிஐ முன்பாக வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக, முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

முன்னுக்கு பின் முரணாக...
கரூர் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17ஆம் தேதி ஆஜர் ஆகிறார். இதுகுறித்து, செந்தில் பாலாஜி வெளியிட்ட பதிவு;
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக, சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற மார்ச் 17ஆம் தேதி அன்று நேரில் வந்து விளக்கம் தருமாறு சி.பி.ஐ. அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்.
இவ்வாறு செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

செப்டம்பர் 27ஆம் தேதி துயரம்
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, தவெக தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

சம்மன் பெற்ற விஜய்
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று மார்ச் 10ஆம் தேதி, ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் டில்லிக்கு பதிலாக, சென்னை அல்லது சென்னைக்கு அருகே ஆஜராக புதியதாக சம்மன் அனுப்பினால், ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும், விஜய் சார்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்து, அவர் ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17ஆம் தேதி ஆஜர் ஆகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved