Also Watch
Read this
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக காங். செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம், இன்று ஜூலை 6ஆம் தேதி காலை, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறியதாவது;
காங். தலைவருக்கு, அமைச்சர்களுக்கு வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு இந்த கூட்டம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை அமைச்சராகவும், விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருப்பதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

லஞ்ச ஒழிப்பு பிரச்சார இயக்கம்
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை-15 அன்று, தமிழகம் முழுவதும் ஒருவார காலம் நிகழ்ச்சி நடத்துவதோடு, ‘லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன், ‘ஊழல் ஒழிப்பு பிரச்சார இயக்கம்” நடத்தும்படி கேட்டுக் கொள்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் மண்டல காங்கிரஸ் கமிட்டிகளை உடனடியாக அமைத்து அதன் விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்
ராமர் கோயிலில் வெளிவரும் ஊழல், நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. பொதுமக்கள் நன்கொடையின் மூலம் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நடப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
இந்த கூட்டுக் கொள்ளை குறித்து, உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து, உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு ஒன்றிய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.

எரிபொருள் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட மானியம் வழங்கப்பட்டு வந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் அந்த மானியம் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிற பா.ஜ.க. அரசு, கச்சா எண்ணெய் விலை குறையும் போது விலையை குறைப்பதில்லை.
இதனை உடனடியாக தடுக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மேகதாது விவகாரம் - ஒரு செங்கல்கூட...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிமேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும்.
தமிழகத்தின் அனுமதியின்றி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.பி. கூறியதை இக்கூட்டம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் என்பதை இக்கூட்டம் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.