Also Watch
Read this
காங்கிரஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக பயணித்து வரும் D.K.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டி.கே.சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியது முதல், முதலமைச்சராக பதவியேற்க உள்ளது வரை விரிவாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து...
தொடர்ந்து, 8 ஆண்டுகளாக கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா ராஜினாமா செய்ததையடுத்து துணை முதலமைச்சர் பதவி வகித்து வந்த டி.கே.சிவக்குமார் ஜூன் 3ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார். தொடக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றிய டி.கே.சிவகுமார், பின் தனது கல்லூரி பருவத்தில் மாணவர் காங்கிரஸ் அமைப்பில் இணைந்தார். கடந்த 1985ஆம் ஆண்டு தனது 23 வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அத்தேர்தலில் அவர் தோல்வியே அடைந்திருந்தாலும், அவரது பெயர் பிரபலமடைந்து அரசியல் வாழ்க்கையின் வெற்றிப் படிகட்டுகளில் முதல்படிகட்டாக அமைந்தது.

மேலிடத்தில் நன்மதிப்பு
ஆரம்பத்தில் சிறைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின் மின்சாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு துவண்டு கிடந்த கர்நாடக மாநில மின்சாரத் துறையை தூக்கி நிமிர்த்தியதாக பேசப்படுகிறது. 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் சிக்கவிடாமல், அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து தடுத்த டி.கே.சிவக்குமாருக்கு மேலிடத்தில் நன்மதிப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் அவரது வீட்டில் நடந்த ரெய்டில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிலையில், அதற்காக திகார் சிறைக்கும் சென்றார்.

ஆறுதல் கூறிய சோனியாகாந்தி
சுமார் 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்த பின் ஜாமினில் வெளியே வந்த நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. அவர் சிறையில் இருந்தபோது சோனியா காந்தியே நேரில் சென்று ஆறுதல் கூறியது காங்கிரஸ் தலைமைக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை காட்டியது.

கர்நாடக முதல்வராக...
2023ஆம் ஆண்டில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்த நிலையில், யார் முதலமைச்சர் என்பதில் சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் நீயா நானா போட்டியே நிலவியது. தலைமை நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னரே சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்ற நிலையில், இருவரும் தலா இரண்டரை வருட காலம் ஆள இருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகிய நிலையில் சித்தராமையா அரியணையிலிருந்து இறங்கவே டி.கே.சிவகுமார் அரியணையில் ஏறுகிறார்.