Also Watch
Read this
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
தனித்துவ திரைக்கதை பாணியில்...
தமிழ்த் திரையுலகில், தமது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவை, சென்டிமென்ட் கூடிய நடிப்பாற்றலால், தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கு, மாபெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிராஜாவின் சிஷ்யர்
திரைத்துறை மீது கொண்ட பேரார்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியாற்றினார். கடந்த 1977ஆம் ஆண்டில், தனது திரைப்பயணத்தை பாக்யராஜ் தொடங்கினார்.

‘16 வயதினிலே’ தொடங்கி...
இவரது பயணத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜா உடன் ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் பணியாற்றியது, ஒரு மைல்கல்லாக மாறியது. ரஜினி, கமல், ஸ்ரீதேவி மட்டுமின்றி, இந்த படம் பாக்யராஜ் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சில நிமிட காட்சியில் பாக்யராஜ் யாரென்றே தெரியாத நிலையில், திரையில் தோன்றினாலும், இன்றும் காட்டிக் கொடுத்து விடுகிறது அவரது குரல்...

இயக்குநராக அறிமுகம்
‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு பாரதிராஜா உடன் இணைந்து கதை எழுதினார். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியவர், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

வில்லனாகவும் அசத்திய பாக்யராஜ்
1979ஆம் ஆண்டு, பாலகுரு இயக்கத்தில் வெளியான ’கன்னிப்பருவத்திலே’ திரைப்படத்திற்கு பாக்யராஜ் தான் திரைக்கதையை எழுதினார். ராஜேஷ் கதாநாயகனாகவும், வடிவுக்கரசி கதாநாயகியாகவும் நடிக்க, இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாக்யராஜ். திருமணத்திற்கு மீறிய உறவாக, அடுத்தவர் மனைவியை அடைய நினைக்கும் கொடூர வில்லனாக பாக்யராஜ் நடித்திருப்பார். அவரது நடிப்பு அப்போது பேசப்பட்டது.

வில்லன் டூ ஹீரோ ஆன பாக்யராஜ்
தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களை படங்களை இயக்கிய பாக்யராஜ், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, அவசர போலீஸ் 100, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சித்து +2 உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்து உள்ளார். இதோடு திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்து, பாடலும் பாடி உள்ளார். இது நம்ம ஆளு படத்தில், பச்ச மலை சாமி வந்து... என்ற இவரது பாடல், பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. ‘பாக்யா’ என்று வார இதழின் ஆசிரியராக இயங்கி வந்தார்.

இந்திக்கு சென்ற பாக்யராஜ்
ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றிருந்தார். பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒடிசா மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

எம்ஜிஆருடன் பாக்யராஜ்
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடித்து பாதியில் நின்று போன திரைப்படமான அண்ணா நீ என் தெய்வம் திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக்கொண்டு அதற்கு புதிய திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தை பாக்யராஜ் வெளியிட்டார். இந்த முயற்சியை இவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று திரையுலகம் பாராட்டியது. தமது கலையுல வாரிசு என எம்ஜிஆரால் பாக்யராஜ் அழைக்கப்பட்டது எவ்வளவு பொருத்தம்...

மகளுக்காக பாரிஜாதம்...
தமது மகன் சாந்தனுவை, வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மூலம் மாஸ்டர் சாந்தனுவாக அறிமுகப்படுத்தினார். மகள் சரண்யாவுக்காக, பாரிஜாதம் என்ற திரைபடத்தை இயக்கி, மகளை கதாநாயகி ஆக்கி, குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார். விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் திரைப்படத்தை எடுத்து, தனது முத்திரையை பாக்யராஜ் பதித்தார்.

திரைக்கதை ஜாம்பவான்
‘திரைக்கதை ஜாம்பவான்’ என்று போற்றப்படும் பாக்யராஜ் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். கதை, வசனம், காமெடி, சென்டிமென்ட் என அவரது படங்கள் கவனம் ஈர்க்கும். சிறந்த திரைக்கதை ஆசிரியராக ரசிகர்களால் அறியப்பட்டவர். தனது சினிமா பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 10ஆம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமான நிலையில், இன்று ஜூன் 27ஆம் தேதி திரைக்கதை மன்னன் பாக்யராஜ், உயிரிழந்துள்ளார்.

குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்பு
கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் கடைசியாக பாக்யராஜ் பங்கேற்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.