Also Watch
Read this
வேளாண் துறைக்கு 58 ஆயிரத்து 374 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்த அமைச்சர் வினோத், வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சட்டப்பேரவையில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற வேளாண் பட்ஜெட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் விஜய்
தோளில் பச்சைத் துண்டுடன் வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், நடப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார். ‘கோட் சூட் போட்ட விவசாயி முதல்வர் விஜய்’ என்று கூறி, வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

ரூ.17,000 கோடி பயிர்க்கடன்
பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதுடன், இதற்காக மாநில அரசு 648 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உறுதியளித்து, மின்சார வாரியத்திற்கு 7 ஆயிரத்து 432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம்
மண் வளத்தை பாதுகாக்க 5 ஆண்டுகளுக்கு 600 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டு, நடப்பாண்டுக்கு 122 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. உயிர்ம உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் ஊத்தத்தொகையும், இயற்கை உர ஊக்கவிப்பிற்கு நான்கரை கோடி ரூபாயும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், மக்காச்சோளம், பருத்தி, கரும்பு சாகுபடி மற்றும் பனை பாதுகாப்புக்கு என மொத்தமாக 74 ஆயிரத்து 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டத்திற்கு 10 கோடியும், தமிழ்நாடு தளிர் கீரைகள் வளர்ப்பு திட்டத்திற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னை விவசாயிகள் கவனத்திற்கு...
மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம் மூலம் ஒவ்வொரு உழவருக்கும் AI அடிப்படையிலான பிரத்யேக செயலி உருவாக்கப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்காக தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்னை சிறப்பு திட்டத்திற்கு 41 கோடியும், 60 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்களுக்கு டானிக் வழங்க 6 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு டிரோன் பயிற்சி
தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க 41 கோடியும், 100 தோட்டக்கலை விற்பனை நிலையங்கள் அமைக்க 5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 57 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை சேமிக்க 22 கோடியில் புதிய கிடங்கு அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் பயிற்சியும், 50 பேருக்கு மானியத்தில் ட்ரோன்களும் வழங்க 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், விளை பொருட்களை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க 10 கோடி மதிப்பில் 43 ஆயிரத்து 500 தார்ப்பாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில்...
மேலும், உழவர் சந்தைகளை புனரமைக்க 20 கோடி, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க 7 ஆயிரத்து 35 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்திற்கு 56 ஆயிரத்து 72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.