Also Watch
Read this
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில், தமிழக அரசு, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தில்...
மதுரை பீபீகுளத்தை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ’தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய அப்பாவி மக்களை, காவல்துறையின் நிலையான உத்தரவுகளை பின்பற்றாமல், சீருடை அணியாத துப்பாக்கி சுடும் வீரர்களைக் கொண்டு, சுட்டுக் கொன்றதற்குப் பொறுப்பான எதிர்மனுதாரர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்,’ என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதம்
இந்த வழக்கில், ஒரே ஒரு காவல் ஆய்வாளர் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் உள்ளது. மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், முப்பது லட்சம் தான் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை மெதுவாக நடைபெற்று வருகிறது என கூறப்பட்டது.

அரசு, சிபிஐ பதில் தர உத்தரவு
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் எந்த உத்தரவும் இல்லாமல் அவரே துப்பாக்கியை எடுத்து 16 பேரையும் சுட்டாரா? ஏன் இவ்வளவு கால தாமதமாக வழக்கு விசாரணை நடைபெறுகிறது? அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில், தமிழக அரசு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தொடர்புடைய காவல், வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை என்ன? தனிப்பட்ட ஒரு விசாரணை அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும் எண்ணம் உள்ளதா? இழப்பீடுத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு உள்ளதா? எனபன குறித்து தமிழக அரசு, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டனர்,