Also Watch
Read this
By: Web Team

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இபிஎஸ் அளித்த பேட்டியில், அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
இபிஎஸ் கூறி இருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே 4 முறை வெளிநாடு பயணம் சென்றிருக்கிறார். இந்த முறை 5ஆவதாக, வெளிநாட்டு பயணத்தின் போது எவ்வளவு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதா?
இதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலமுறை தெரிவித்தேன். இதுவரைக்கும் பதிலே இல்லை. வெறும் காகித அளவிலே தான் இருக்கிறது, எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
அதிமுக அரசு 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி, சுமார் 3 லட்சத்து 5000 கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, அந்த தொழில்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழக மக்கள் கூர்மையானவர்கள், சிந்திக்க கூடியவர்கள். தமிழகத்தில் 2 கட்சி தான் பெரிய கட்சி. அந்த 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை, சுமார் 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் இந்தியாவிலே சிறந்த மாநிலம் என்ற பெயர் பெறுகிற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்து, அதனால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்றிருக்கின்றனர். எனவே நாங்கள் மக்களை சந்திக்கிற போது, தெளிவாக இதை எடுத்துச் சொல்லிவிட்டோம்.
ஆனால், திமுக 4 ஆண்டுகாலம் ஆட்சியிலே இன்றைக்கு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமை, பல்வேறு போராட்டத்தை இந்த அரசு சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது.
எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, சுமார் 210 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பயணம் வெள்ளை அறிக்கை வேண்டும் #edappadikpalaniswami #mkstalin #shorts #newstamil24x7