Also Watch
Read this
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்களை கைது செய்ய அரசு திட்டமென அபிஜித் தீப்கே தகவல் தெரிவித்துள்ளார். முக்கிய உறுப்பினர்களை கைது செய்தாலும், நாடு முழுவதும் போராட்டம் நிற்காமல் தொடரும் என்றும் அறிவித்து உள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் இன்று மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சோனம் வாங்சுங் உண்ணாவிரதம்...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், உயர்கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி, கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து சோனம் வாங்சுக் கூறி இருப்பதாவது;
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 எம்பிக்கள் என்னை நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், நாட்டில் வன்முறை பரவுவதை தடுக்கும் நோக்கிலும் 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன். இந்த நிபந்தனைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவில் விரிவாக விளக்குகிறேன். அதேவேளையில் எந்த இடத்திலும் வன்முறைக்கு இடம் தராதவாறு அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சோனம் வாங்சுங் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி அறிவிப்பு
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய மசோதா குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். மேலும், சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.
போராட்டம் தொடரும்
இதற்கிடையே, சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டாலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தங்களது அமைதியான போராட்டம் தொடரும் என்றும், நாடு முழுவதும் மாவட்ட அளவில் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் சிஜேபி அறிவித்து உள்ளது.