Also Watch
Read this
கும்மிடிப்பூண்டியில்,குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு காவல் துறையின் தோல்வியே காரணம் என்று, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து உள்ளார். போதைப்பொருள் புழக்கத்தால் நிகழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

குழந்தை உயிரிழப்பு, அதிர்ச்சி
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது;
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகில் வசிக்கும் வட மாநில குடும்பத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தையை மனித மிருகங்கள், தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இன்று காலை உயிரிழந்தது. குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நினைத்துப் பார்க்கவே...
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலை தருகிறது. குழந்தையை சீரழித்த மனித மிருகங்களும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது. நால்வரும் கஞ்சா போதையில் தான் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

ஏற்கெனவே இந்த பகுதியில்...
கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி 4ம் வகுப்பு பயிலும் சிறுமியை, ஆந்திராவில் இருந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித மிருகம், கொடூரமாக வன்கொடுமை செய்தான். இதைக் கண்டித்து பாமக தொடர் போராட்டம் நடத்திய பிறகு தான், குற்றவாளி கைது செய்யப்பட்டான். அந்த வழக்கின் விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்ந்து உள்ளது. ஆரம்பாக்கத்தில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மனதில் கொண்டாவது, இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவு தான் மூன்றரை வயது குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடுமை.

குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம், அதனால் நிகழும் பெண்கள், குழந்தைக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை அரசும், காவல் துறையும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை அரசும், காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும்
இவ்வாறு அன்புமணி தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved