Also Watch
Read this
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து கனிமொழி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். அரசு என எதுவும் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி சம்பவம்...
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறி இருப்பதாவது;
கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

தூத்துக்குடி சம்பவம்...
தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்னும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள தனியாக உதவி எண் கூட இல்லாத ஒரு 'சிறப்பு படை'யை உருவாக்கி விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறது இந்த தவெக அரசு.

'சிறப்பு படை' இருந்து என்ன பயன்?
சமூக நலத் துறை சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை' இருந்து என்ன பயன்?

பூந்தமல்லி சம்பவம்...
பூந்தமல்லி அருகே சமூக விரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவில் உள்ள புதுப்புது எம்எல்ஏக்களை வாங்குவதில் தான் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு கனிமொழி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved