Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானை ஒட்டிய தென்கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 400 வீடுகள் மொத்தமாக தரை மட்டமானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள குனார் மாகாணத்தில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து 4.7 - 4.3 - 5.0 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கமும் நில அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டன.
நள்ளிரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து, பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் நில அதிர்வுகளில், குனார் மாகாணத்தில் உள்ள நுார்கல், சவ்கே மற்றும் வதபூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
நில நடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். மண் மற்றும் கல் வீடுகளால் ஆன பகுதி என்பதால், நிலநடுக்கத்தின் சக்தியை தாங்க முடியாமல் வீடுகள் எளிதில் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 411 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.