Also Watch
Read this
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார். ஈரான் நாட்டுடன், இனிமேல் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என்றும் காட்டமாக கூறி உள்ளார்.

மீண்டும் போர் பதற்றம்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தத்தை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இவ்வாறு அறிவித்து உள்ளார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில், மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ளது.

என்ன சொல்கிறார் டிரம்ப்?
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், "அவர்கள் ஒரு கழிசடை. கழிசடை என்றால் என்னவென்று தெரியுமா? மனநோயாளிகள் என்று பொருள். அவர்களை வழி நடத்துபவர்களும் மனநோயாளிகள். அவர்கள் கொடூரமான, வன்முறையான மக்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால், அவர்கள் அதை பயன்படுத்தியிருப்பார்கள். என்னைப் பொருத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது" என்று கூறி உள்ளார். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நேரம் வீண் தான் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

கப்பல்கள் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ள பதிவில், வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்காக பெரிய அளவிலான விலையை கொடுக்க வைக்கும் வகையில், அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு படைகள் ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவையற்றது, ஆபத்தானது எனவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில், 24 மணி நேரத்தில் மட்டும் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத ட்ரோன் மூலம் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக லண்டன் கடல்சார் வணிக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. முதல் தாக்குதலில், எண்ணெய் கப்பல் மட்டும் சேதம் அடைந்ததாகவும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், ஓமன் கடற்கரை அருகே மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கப்பல் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. 3ஆவதாக இன்னொரு கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.