Also Watch
Read this
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

தவெக ஆட்சி, இழுபறி
மே 7ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த நிலையில், பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்துவைப்பேன் என்று, ஆளுநர் கறார் காட்டியதால் விழா தள்ளிப் போனது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சி அமைக்க முடியாது என்பதால், திமுக கூட்டணியில் மீதமிருக்கும் விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இ.கம்யூ. ஆகிய கட்சிகளை இ-மெயில் வாயிலாக தவெக அணுகியது. ஆனால், அந்த கட்சிகள் நேரம் தாழ்த்தவே நேரடியாகவே தவெக நிர்வாகிகள் சென்று சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.

திருமாவளவன் நிலைப்பாடு
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை, வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவுக்கு ஆதரவு அளிக்க போகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்து திருமாவளவன் கூறியதாவது;
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

நாளை காலை விசிக முடிவு
அரசியல் நெருக்கடி குறித்து இன்று மாலை இணைய வழியாக ஆலோசனை நடைபெற உள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை அறிய வேண்டியது எனது கடமை. ஆலோசனை முடிந்த பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். நாளை காலை முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved