Also Watch
Read this
By: Web Team

அதிமுகவில் பிரிந்த சக்திகள் ஒன்றிணையும் என்ற நம்பிக்கையில், ஒன்று கூடியுள்ளோம் என்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் தெரிவித்தனர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மூவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:
திரளான மக்கள் வருகை புரிந்து மரியாதை செலுத்துவதை பார்த்தால், தேவர் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாகவும் நடந்து இருக்கிறார் என்பது இன்றைக்கு உறுதியாகிறது.
அதிமுகவில் பிரிந்த சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று, நல்ல எண்ணத்தோடு, நம்பிக்கையுடன் கூடி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் அமைந்திட சபதத்தை மேற்கொண்டு இருக்கிறோம். நடந்து கொண்டு இருக்கும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எங்களது ஒருங்கிணைப்பு இருக்கும்.
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
அப்போது, ”இதனை கூட்டணியாக அறிவிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “பொறுத்திருங்கள்” என்றும், ”உங்கள் கூட்டணி தொடருமா?” என்ற கேள்விக்கு, “தொடரும்” என்றும் ஓபிஎஸ் பதிலளித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளோம். துரோகத்தை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியை கொண்டு வருவதற்கு, தொண்டர்கள் அனைவரையும் ஒன்று இணைக்கும் முயற்சியாக, இன்றைக்கு இணைந்துள்ளோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “அனைவரும் ஒன்றிணைவோம் என்று குரல் கொடுத்தேன். அதேதான் இன்றும் நீடிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved