Also Watch
Read this
24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரியும், பெரும்பான்மை இல்லை எனக்கூறி அழைப்பு விடுக்காத நிலையில் விஜய் சந்தித்து பேசி உள்ளார்.
உரிமை கோரியும் அழைக்கவில்லை
நேரில் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியும், தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் அர்லேகர், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் அழைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் அழைப்பு விடுக்காததால் முதலமைச்சராக விஜய் பதவியேற்பதில் இழுபறி நீடிக்கிறது. 118 என்ற பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுவதால் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அழைப்பு
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலுகத்திற்கு வருமாறு அழைப்பு விடப்பட்டு உள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா ரத்தான நிலையில், பனையூர் தலைமை அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
108 இடங்களில் தவெக வெற்றி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக ஆதரவு கோரி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தது. இதில், காங்கிரஸ் 5 இடங்களிலும், இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், விசிக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் ஆதரவு
திமுக உடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு திடீர் ஆதரவு அளித்தது. இதையடுத்து தவெகவின் ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்தது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை உள்ளது.
இந்நிலையில், ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விஜய், வியாழக்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக, தவெக தலைவர் விஜய், ஆளுநரை நேரில் சந்தித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved