Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 05:11 AM
இன்று பிற்பகல் சென்னையில் இருந்து, தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்படுகிறார். கரூரில் 41 பேர் மரணம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு நேரில், நாளை 15ஆம் தேதி ஆஜராக உள்ளார்.
கரூர் சம்பவம், விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று மார்ச் 14ஆம் தேதி பிற்பகல், தவெக தலைவர் விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. இன்று இரவு டெல்லியில் உள்ள ஓட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசிய தலைவர்களை ரகசியமாக சந்தித்துப் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சந்திப்பு நடந்தால், பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும்.
தேர்தல் களத்தில் தவெக விஜய்
வரும் 2026 சட்டசபைத் தேர்தல் களத்தில் விஜய் துவக்கி உள்ள தவெக திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தவெக முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி திட்டத்தை விஜய் அறிவித்தார். இது ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி, தவெகவை நோக்கி வரும் என விஜய் தரப்பு மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தது.
திமுகவை ’கை’ விடாத காங்கிரஸ்
ஆனால், காங்கிரஸ் கட்சி மறுபடியும் திமுக உடனேயே பயணிக்க முடிவு செய்தது, தவெகவின் ஆரம்ப கட்ட வியூகத்துக்கு தோல்வியை தந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த சந்தேகத்தால், பிற கட்சிகள் தவெக பக்கம் வரத் தயங்கின. சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளை தன் பக்கம் இழுக்க விஜய் தரப்பு வகுத்த திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
தவெகவை சூளும் சம்பவங்கள்
தவெக தலைவரை சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நெருக்கடிகள், வலை விரித்தன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டு சிக்கல், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப பிரச்சினை என, விஜய் விமர்சனத்தில் சிக்கினார். இந்த நிலையில், தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழி வகுத்து, திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை அதிமுக கூட்டணியும் கணித்தது.
காய் நகர்த்தும் பாஜக
தவெகவை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக, பாஜக தேசியத் தலைமை காய் நகர்த்தி வருகிறது. திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முயற்சியாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கி உள்ளதாம். இந்த சூழலில் தான், 'பாஜக உடன் கூட்டணி அமைக்கலாமா?' என்று, தவெக தரப்பையும் யோசிக்க வைத்து உள்ளது.
திடீரென அவசர ஆலோசனை
இந்த பரபரப்பான சூழலில், தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக, அவசர ஆலோசனையை பொதுச்செயலாளர் ஆனந்த் மேற்கொண்டார். மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பார்ப்போமா? நெருக்கடிகளை சமாளிக்க கூட்டணி அமைப்போமா? பாஜக உடன் கூட்டணி அமைத்தால், ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்கு என்ன விளக்கம் சொல்வது? என்றெல்லாம் விவாதம் நடந்துள்ளது.
கூட்டணிக்கு பச்சைக்கொடி
ஆலோசனையில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்களில் பலரும், "புதிதாக களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக உடன் கூட்டணி அமைப்பதே நல்லது, பாதுகாப்பு" என்று, பகிரங்கமாகவே கூறினார்களாம். இருந்த போதிலும், தவெக தலைமை எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி கூறி உள்ளனர். இந்நிலையில், விஜய் டெல்லிக்கு புறப்பட உள்ளார். நாளைக்கு தெரிந்து விடும்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved