Also Watch
Read this
சென்னை, கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால், வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதியான வில்லிவாக்கத்தில், வேறொரு நாளில் விஜய் பிரச்சாரம் செய்வார் என மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் தகவல் தெரிவித்து உள்ளார்.

அதிரும் தேர்தல் களம்
எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று, தமது பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்த உடனேயே, பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியிலும் விஜய் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஆதவ் போட்டியிடும் வில்லிவாக்கம்
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா-வை ஆதரித்து, இன்று பிற்பகல், கட்சித் தலைவர் விஜய் Road Show நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் வில்லிவாக்கம் பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகளில் காத்திருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வில்லிவாக்கத்தின் உட்புறச் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதாலும், லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும்போது கூட்ட நெரிசலில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், கடைசி நேரத்தில் காவல் துறை இந்தப் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொண்டர்கள் ஏமாற்றம்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் தலைவர் விஜய்யை காண காத்திருந்த தொண்டர்களுக்கு, பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தவெக நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு நலன் கருதி கட்சித் தலைமை இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதியான வில்லிவாக்கத்தில், வேறொரு நாளில் விஜய் பிரச்சாரம் செய்வார் என்று, மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் தகவல் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved