Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகர் விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளில், தனது காதல் குறித்தும், திருமணம் குறித்த முக்கியமான அறிவிப்பையும் வெளியிடுவேன் என நடிகர் விஷால் கூறியிருந்தார்.
நடிகர் விஷால் இப்படி சொன்னதும், இணையத்தில் யார் அந்த பெண்? எனப் பலரும் தேடுதலைத் தொடங்கினர்.
இதற்கிடையில், நடிகை சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாய் தன்ஷிகா, ’நானும் விஷாலும் காதலிக்கிறோம், இந்த மேடை திருமண அறிவிப்பு மேடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை’ என்று ’ஷாக்’ கொடுத்தார்.

மேலும், ’நானும் விஷாலும் 15 வருட நண்பர்களாக இருந்தோம். இப்போது காதலர்களாக மாறி இருக்கிறோம். இதற்கு மேல் மறைக்க முடியாது’ என்றார் சாய் தன்ஷிகா.
இந்த நிலையில், விஷாலின் பிறந்த நாளான இன்று அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீட்டில் விஷால், சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த விழாவில் விஷாலின் பெற்றோர், தன்ஷிகாவின் பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அந்த போட்டோவை நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
48 வயதான விஷால் எப்போது திருமணம் செய்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தனது பிறந்த நாளன்று, மகிழ்ச்சியான செய்தியை கூறி இருக்கிறார்.
இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved