Also Watch
Read this
By: Admin News Tamil

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மணிகண்டன், வறுமையில் உள்ள பல பெண்களை குறிவைத்து அவர்களிடம் நெருங்கிப்பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டலில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மாநகர காவல் ஆணையாளருக்கு தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்ப, அது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதனை விசாரித்து பெண்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டிய அந்த காவல் நிலைய போலீசார், மணிகண்டனை வரவழைத்து ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து தவெக நிர்வாகியை தப்பிக்கவிட்டனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண் கடந்த 1 வாரத்திற்கு முன்னர் நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத்தை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் கூறினார்.. அதன்பிறகு, தவெக நிர்வாகியின் தரங்கெட்ட வேலையை நியூஸ் தமிழ் அம்பலப்படுத்தியது.. அதன்பிறகுதான் மணிகண்டனையே கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஆனாலும், கொண்டலாம்பட்டி எஸ்.ஐ. ஆனந்த் உள்ளிட்டோர், அத்தனை ஆபாச வீடியோக்களையும் டெலிட் செய்து, மணிகண்டனை தப்பிக்கவிட்டு அவ்வளவு அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? நீதியை மூடிமறைக்க நிதி ஏதாவது மணிகண்டனிடம் இருந்து காவலர்களுக்கு கைமாறியதா? காவல்துறை மக்களுக்கு வேலை செய்கிறதா? அல்லது குற்றவாளிகளுக்கு வேலை செய்கிறதா? என பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.. இதற்குமத்தியில், எஸ்.ஐ. ஆனந்தால் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. கொண்டலாம்பட்டி ஏரிக்கரை ரோட்டை சேர்ந்தவர் கந்தன். இவரது 29 வயது மகன் தினேஷ் நெய்யகாரன்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இந்நிலையில், வேறொரு இளைஞரை காதலித்த அந்த இளம்பெண் கடந்த 15 ஆம் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியேறினார்.
தினேஷ்தான் காதலித்து தனது மகளை அழைத்து சென்றதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.. அதனால், அந்த இளைஞரை வரவழைத்த எஸ்.ஐ. ஆனந்த், கண்மூடித்தனமாக அடித்து உதைத்து விசாரித்ததாக தெரிகிறது.. தான் நட்பாக மட்டுமே பழகியதாகவும், காதலிக்கவே இல்லையென தினேஷ் கூறியும், விடாமல் எஸ்ஐ ஆனந்த் லத்தியால் அடித்து ஆத்திரத்தை தீர்த்ததாக கூறப்படுகிறது.. அதோடு, இளைஞரின் பைக்கையும், செல்போனையும் பறித்து பெண் வீட்டாரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.. இதனிடையே, 16 ஆம் தேதி தனது காதலனை திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக காவல் நிலையத்திற்கு வந்து தஞ்சமடைந்துள்ளார் இளம்பெண். அப்போதுதான் தெரிந்தது தினேசுக்கும், இளம்பெண் மாயமானதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது. ஆனாலும், ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தாய்மாமா, தினேசுக்கு போன் செய்து தங்கள் வீட்டுப்பெண் காதல் திருமணம் செய்துகொள்ள காரணமே நீதான் எனக்கூறியதோடு, உன்னை எந்த இடத்தில் பார்த்தாலும் பொலி போட்டுவிடுவேன், வெட்டி புதைத்துவிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.
ஏற்கெனவே எஸ்.ஐ. ஆனந்தனின் தாக்குதலால் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட தினேஷ், இளம்பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதால் மேலும் மனஉளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இளம்பெண் காதல் திருமண விவகாரத்தில் எஸ்.ஐ. ஆனந்த் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர்.மேலும் அவரது பைக்கையும், செல்போனையும் ஏன் இளம்பெண் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும்? காவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதானே சரியென கூறியதோடு எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தவெக நிர்வாகி மணிகண்டன் விவகாரத்திலேயே முறையான நடவடிக்கை எடுக்காத ஆனந்தை வெறும் பணியிட மாற்றம் செய்யாமல், அவர் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்திருந்தாலோ அல்லது நிரந்தர பணிநீக்கம் செய்திருந்தாலோ, எந்த தவறுமே செய்யாத ஒரு இளைஞரின் உயிர் பறிபோயிருக்காது எனவும் இனிமேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் பணியிட மாற்றத்தை மட்டுமே செய்தால் அவரது அதிகார திமிரில் அடுத்தடுத்த உயிர்கள் பறிபோவது தொடரும் எனவும் கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved