Also Watch
Read this
இன்றைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - IUML தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் காதர் மொய்தீன் கூறியதாவது;
தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்று நாங்களும் நம்பினோம், உழைத்தோம். ஆனால், தேர்தல் முடிவு வேறாக அமைந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாக்குகளால் 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு' சாதகமான சூழலை உருவாக்கினர்.

தவெகவுக்கு ஆதரவு
த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. அந்தச் சூழலில், தவெக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருந்தன்மையோடு எங்களை அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தார். அகில இந்திய தலைமை மற்றும் கேரள அரசியல் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலோடு, தற்போது த.வெ.க அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இணைந்துள்ளது.

"திமுகவுக்கு வாக்களிப்பது 6ஆவது கடமை"
இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உள்ளன. ஜனநாயகத்தில் ஆறாவது கடமை ஓட்டு போடுவது என்று தான் நான் மறைந்த மூத்த தலைவர் எஸ்.எம்.பக்கர் கூட்டத்தில் பேசினேனே தவிர, தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமை என்று நான் எப்போதும் கூறவில்லை. ஊடகங்கள் தங்களுக்குத் தகுந்தாற்போல் கற்பனையாகக் கேள்விகளை உருவாக்கக் கூடாது.

உள்ளாட்சி தேர்தலில்...
தற்போதைய த.வெ.க ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் இந்த நல்லாட்சி தொடர, த.வெ.க கூட்டணியோடு இணைந்து முஸ்லிம் லீக் முழு ஒத்துழைப்பை வழங்கும். கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை, பெயர் வைக்கும் போது அதைப் பயன்படுத்துவோம். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் எங்களுக்குக் கிடைக்காத மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் போன்ற வாய்ப்புகளை இம்முறை த.வெ.க கூட்டணியில் பெற்று சமுதாயத்திற்குப் பாடுபடுவோம்.

ஷோபா வந்ததா?
முஸ்லிம் லீக் கட்சி வரலாற்றிலேயே எங்கள் அலுவலகத்திற்கு எந்தவொரு முதலமைச்சரும் வந்ததில்லை. ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதரவு தந்ததற்காக நேரில் வந்து நன்றி கூற விழைந்தார். தெரு மிகவும் குறுகலானது என்பதால் நான் பலமுறை மறுத்தும், அவர் அனைத்துக் கட்சி அலுவலகங்களுக்கும் செல்வது போல் இங்கும் வருவேன் என்று உறுதியாகக் கூறி வந்தார்.

அவர் வருவதற்காக, ஒரே இரவில் அலுவலகத்திற்கு வெள்ளை அடித்து, வாடகைக்கு 7, 8 சோபாக்களை வாங்கிப் போட்டு அவரை அமர வைத்தோம். அவர் கிளம்பிய உடனே அந்த சோபாக்கள் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டன. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved