Also Watch
Read this
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், திமுகவை சேர்ந்த மேயர் சுஜாதா தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, அதே கட்சியை சேர்ந்த துணை மேயரான சுனில்குமார் 'நீ, வா, போ...' என்று மேயரிடம் ஒருமையில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயர்- துணை மேயர்- மண்டலக் குழுத் தலைவர் என மூன்று தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒருமையில் பேச, மாமன்ற கூட்டமே அமளி துமளியானது. திமுகவை சேர்ந்த இந்த மூவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது எதற்காக?

ஆட்சி மாறியது, காட்சியும் மாறியது
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தமிழக அரசியலில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்று யாராவது சொன்னால் அதை நம்ப வேண்டாம்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், ஒரே கட்சியை சேர்ந்த மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், ஒன்றாவது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா ஆகிய மூவரும், மாறி மாறி வசைபாடிய காட்சிகள் பேசு பொருளாகி உள்ளது. அந்த ஒரே கட்சி திமுக தான்.

வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்
வேலூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் வெள்ளியன்று கூடிய நிலையில், மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் குறித்த நேரத்தில் ஆஜரான நிலையில், மாநகராட்சி ஆணையர் உள்பட அரசு அதிகாரிகள் யாரும் வராததால், கூட்டத்திற்கு வந்திருந்த மேயர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் பலரும் டென்ஷன் மோடுக்கு சென்றனர். ஆளும் கட்சி மாறியதால் அதிகாரிகள் கூட்டத்தை புறக்கணிக்கிறார்களா? என முணுமுணுக்க, காலதாமதமாக வந்த மாநகராட்சி ஆணையரிடம் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர் மேயரும், துணை மேயரும்.

மேயர் சுஜாதாவின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு
கூட்டம் தொடங்கியதும், மாமன்ற அறையில் இருந்த செய்தியாளர்களை வெளியேறும்படி மேயர் சுஜாதா கட்டளையிட, அதற்கு கூட்டத்தில் இருந்த மற்ற கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கே வாக்குவாதம் சூடுபிடிக்க தொடங்கியது.
"வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சீர்கெட நீ தான் காரணமே, மாநகராட்சியே நாசமா போச்சு, பணிகளுக்கு அனுமதி வழங்க மேயர் 10 சதவீதம் கமிஷன் கேட்கிறார்" என துணை மேயர் சுனில்குமார் சரமாரி குற்றம் சாட்ட, "மரியாதை இல்லாமல் நீ, வா போ என பேச வேண்டாம்" என துணை மேயரை எச்சரித்தார் மேயர் சுஜாதா.

ரூ.100 கோடிக்கு ஒப்பந்த பணி எடுத்ததே...
"துணை மேயர் ஒரு வார்டுக்கு மட்டுமல்ல; மாநகராட்சியில் உள்ள 60 வார்டுக்கும் சேர்த்து தான், 100 கோடிக்கு நீங்க தான் வேலை எடுத்திருக்கீங்க; 40 கோடிக்கு ரோடு காண்டிராக்ட் எடுத்து அதை முறையா செய்யல; அதனால் காட்பாடி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்காங்க" என துணை மேயர் சுனில்குமார் மீது காரசாரமாக குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டே சென்றார் மேயர் சுஜாதா.
மேயரும், துணை மேயரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டிருந்தபோது, இடையில் புகுந்த மாநகராட்சி ஒன்றாவது மண்டலக் குழுத் தலைவர் புஷ்பலதா, தமது பங்குக்கும் மேயரிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். தமது மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டில் எந்த ஒரு பணிகளும் முறையாக நடக்கவில்லை என்றும், ஒவ்வொரு பணிக்கும் ஆர்டர் கொடுப்பதில் காலதாமதம் செய்வதாக மேயரை நோக்கி கேள்வி எழுப்பினார் புஷ்பலதா.

பினாமி பெயரில் டெண்டர்
"சும்மா இரும்மா, நீங்க சண்டை போடனும்னு வந்திருக்கிங்க. கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி போல செயல்பட்டுக் கொண்டே இருக்கீங்க, உங்க மண்டலத்தில 90 கோடி ரூபாய்க்கு பணி செய்து முடித்ததாக நீங்களே நன்றி சொல்லிவிட்டு, இப்போ இப்படி பேசுறீங்களே இது நியாயமா? துணை மேயரும் நீங்களும் சேர்ந்து கொண்டு பினாமிய வைத்து டெண்டர் எடுத்து பணி செய்தீங்க, அதையும் ஒழுங்க செய்யல, இதனால காட்பாடி மக்கள்தான் அவதிப்படுறாங்க, இதற்கு நீங்களே பதில் சொல்லுங்க" என உள்ளடி வேலையை போட்டு உடைத்தார் மேயர் சுஜாதா.

ரண களமான மாமன்ற அரங்கம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புஷ்பலதா, "மேயர் நீங்க தான் வரம்பு மீறி பேசுறீங்க, பினாமினு சொல்வது நியாயமா?" என கேட்டு வெகுண்டெழுந்தார். இந்த மூவரின் வார்த்தை போரால், மாமன்ற கூட்டமே போர்க்களமாக மாற, திமுகவையும், அதன் ஆட்சியையும் இந்த மூவரும் சந்தி சிரிக்க வச்சிட்டாங்கன்னு, கூட்டத்தில் இருந்த சக திமுக கவுன்சிலர்கள் ஆதங்கப்பட்டனர். மொத்தத்தில் இம்மாத மன்றக்கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமல், களேபரத்தில் முடிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved