Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளாமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டியும் முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர்.
அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்ஸவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை சிறப்பு கொண்ட விழாக்கள் ஆகும். அந்த வகையில் சிறப்பு பெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் இன்று அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மன் சன்னதியில் முன்புள்ள கொடி மரம் முன்பு மீனாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற தரிசனம் செய்தனர்.
ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றதுடன் இன்று தொடங்கியதையடுத்து விழா நடைபெறும் 10 நாள்களும், தினமும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் வளாகத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அப்போது சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வரவேற்பு நடைபெறும். அதனை தொடர்ந்து கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டி அம்மன் இருப்பிடம் சேர்த்தியாவார். விழாவில் வரும் 22-ம் தேதியன்று மாலையில் அம்மன் ஆடி வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் மூலம் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்புவதால், அதனடிப்படையில் பூஜைகள் அனைத்தும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.