Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி ராகுல் (21). இளங்கலை பட்டப்படிப்பு முடித்த ராகுல் தனது தந்தையின் மீன் பண்ணையை கவனித்து வருகிறார். இவர் தமது வீட்டின் அருகே பள்ளி சிறுவர்கள் மூவர் மது அருந்தி கொண்டும், கஞ்சா புகைப்பதை கண்டு சிறுவயதிலேயே ஏன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி மது அருந்துகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக சிறுவர்களின் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் இருசக்கர வாகனத்திற்கு பாட்டிலில் வாங்கி வைத்த பெட்ரோல் கேனில் தீ வைத்து ராகுல் மீது வீசியுள்ளனர்.

இதில் ராகுல் கை, காது, கழுத்து ஆகிய இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக ராகுல் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த செங்குன்றம் போலீசார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 3 சிறார்களை கைது செய்தனர்.
மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் மீது சிறுவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.