Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த ஸ்தலமாக இத்திருக்கோயில் விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான 10 வது நாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றதை தொடர்ந்து 11ம் நாள் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேரோட்டத்தினை முன்னாள் அமைச்சர் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முதலில் சென்ற பெரிய தேரில் சொக்கநாதர் பிரியாவிடை உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து தேரோடும் வீதிகளில் பவனி வந்தனர்.
பக்தர்கள் சிவநாமத்துடன் சிவ வாத்தியங்கள் முழங்க மேள தாளங்கள் முழங்க தேரினை தேரோடு வீதிகளில் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். அதனை தொடர்ந்து சிறிய தேரில் மீனாட்சி தேராடும் வீதிகளில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரில் வலம் வந்த சொக்கநாதரையும், மீனாட்சியையும் வழிபட்டு மகிழ்ந்தனர்.
இந்த தேரோட்டத்தினை காண அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.மேலும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.