Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக, இங்குள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் பெருமளவில்
மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனையின் நுழைவாயில் மற்றும் உள்வளாகப் பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளைக்கூட கைகளில் தூக்கிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் தடுமாறி வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்காததால், அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே உடல்நலக்குறைபாட்டுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, இந்தச் சூழல் மேலும் உபாதைகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் உடனடியாக இறைத்து வெளியேற்ற நகராட்சி நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மீண்டும் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும்" எனப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.