Also Watch
Read this
நடிகர் சூர்யாவுக்கு அரசியல் ஆசை இப்போதைக்கு இல்லை என அவரது ரசிகர் மன்றம் சார்பில் விளக்கம் தரப்பட்டு உள்ளது. சமூக சேவைகளே சூர்யாவிற்கு மனநிறைவை அளிப்பதாகவும், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

’இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’
இதுகுறித்து, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
கடந்த 28ஆம் தேதி (28.06.2026) அன்று நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இரா.வீரமணி, ’இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

தவறான தோற்றம்
ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் சூர்யாவின் நிலைப்பாடு
அதேபோல், நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூக சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நிலைப்பாடுகளை செயல் தலைவர் ஆர்.ஏ.ராஜ் மற்றும் அமைப்பாளர் ஜி.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆகவே, சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
