Also Watch
Read this
பாஜகவுக்கு எதிராக திமுகவும், தவெகவும் ஓரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்துக்கு மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திமுக, தவெக இணைவை ஏற்கவே முடியாது என திருச்சி எம்.பி. துரை வைகோ கூறி உள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதுதொடர்பாக, மதிமுக எம்பி துரை வைகோ கூறியதாவது;
வியட்நாமில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்கள் செவ்வாய் அல்லது புதன்கிழமை சொந்த ஊருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்திற்கு அஜாக்கிரதை தான் காரணம் எனக் கூறுகிறார்கள். எனவே, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றனவா? என்பதைப் பார்த்தே பொதுமக்கள் சுற்றுலா செல்ல வேண்டும். உயிரிழந்தோர் இல்லங்களுக்குச் சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன்.

தவெகவுக்கு அவசியம் கிடையாது
முதல்வர் விஜய் அரசு, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களைக் களவாட வேண்டிய அவசியம் கிடையாது. அவர்கள் மக்களின் வாக்குகளைக் களவாடினார்களா என்ன? பல கோடி ரூபாய் செலவு செய்தும் திமுக மற்றும் அதிமுகவால் தேர்தலில் வெல்ல முடியவில்லை. திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி வைக்க முயற்சி செய்ததால் தான், அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.

விலை போன மதிமுக எம்எல்ஏக்கள்
மதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் விலை போய் விட்டார்கள். தற்போது திமுகவின் 'பவர் சென்டர்' ஒரு சிலரின் கையில் தான் உள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாததால் தான், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சிகளிலிருந்து வெளியேறுகிறார்கள்.

புதிய விமான நிலையம் வேண்டும்
கடந்த அதிமுக - திமுக ஆட்சிகளில் புதிய விமான நிலையம் கொண்டு வர முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைத் தமிழக வெற்றித் கழக அரசு கைவிட்டுள்ளது. அதற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

திருமாவளவன் பேச்சு
பா.ஜ.க.வை எதிர்க்க திமுக - த.வெ.க. ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இணைவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்த திமுக, எவ்வாறு பாஜகவை எதிர்க்க முடியும்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பொறுத்தவரை, காப்பர் தயாரிப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதேசமயம், சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதிக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

அண்ணாமலைக்கு வரவேற்பு
தமிழக அரசின் கடன் அளவு மேலும் உயரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்து, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2031ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி அமைக்கப் போவதாகச் சொல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். போதை இல்லா தமிழகம், பெண்களுக்குப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் அண்ணாமலை எடுக்கும் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கவை.

துணையாக இருப்போம்
தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் பெருமளவு குறைந்துள்ளது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அது சரியான திசையில்தான் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் இல்லாத ஒரு மாற்றத்தை விஜய் கொண்டு வந்துள்ளார். அதை பாதுகாக்க நாங்கள் அவருக்கு துணையாக நிற்கிறோம்
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.