Also Watch
Read this
By: Manigandan Raja

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் உள்ள வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து கெளாப்பாறை கிராமத்திற்கு செல்லக்கூடிய வலது புற கால்வாயை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்து ஆங்காங்கே விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செல்லக்கூடிய பொது வழி பாதையும் இருந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டின் போது நீர்வளத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு சில ஆக்கிரமிப்புகள் மட்டுமே
அகற்றப்பட்டன.
மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வரும் நிலையில், கெளாப்பாரறை கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரின் உடலை அடக்கம் செய்வதற்காக வழிப்பாதை இல்லாததால் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும்.
எனவே பொதுமக்கள் சிரமமின்றி சுலபமாக செல்லும் வகையில் உள்ள பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு அகற்ற ஒத்துழைப்பு அளிக்காததால் ஆத்திரமடைந்த கெளாப்பாறை கிராம மக்கள் ஒன்றுதிரண்டு திடீரென அரூர் To சித்தேரி மலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வருவாய்த் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved