Also Watch
Read this
By: Manigandan Raja

திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலியான முகவரி மற்றும் அடையாள விவரங்களை பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளாக
வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படும் நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
சொந்த ஊருக்கு திரும்பும் பொழுது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பரதர் உவரி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் தந்தை போரஸ் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 2ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையாக வசித்து வந்ததும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவுடன் இருந்ததும் தெரியவந்தது. விண்ணப்பத்தில் இருந்த புகைப்படத்தை காட்டி விசாரித்தபோது, புகைப்படத்தில் இருந்தவர் ஜார்ஜ் அல்ல என்றும், அவர் பனி செல்வின் என்ற நபர் என்றும், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசித்து பின்னர் மணப்பாடு பகுதிக்கு குடிபெயர்ந்ததாகவும் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு புகைப்படத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், செல்வின் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வந்த முகவரி கண்டறியப்பட்டது.
பனி செல்வினின் மனைவி சரண்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது கணவரின் முழுப்பெயர் பனி செல்வின் என்றும், அவரது தந்தை பெயர் லாசர் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக ஜார்ஜ் என்ற பெயரிலும், உவரி முகவரியையும் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்று சவூதி அரேபியாவில் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பனி செல்வினின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த லாசரின் மகன் பனி செல்வின் என்பது உறுதியானது.
இதையடுத்து, உண்மையான அடையாளத்தை மறைத்து, ஜார்ஜ் என்ற பெயரிலும் போலி முகவரியிலும் பாஸ்போர்ட் பெற்று பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படும் பனி செல்வின் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், உவரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நதியா, பனி செல்வின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 177, 419, 465, 468, 471 ஆகிய பிரிவுகள் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் 12(1)(b) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாஸ்போர்ட் புதுப்பிப்பு சரிபார்ப்பின் போது நடைபெற்ற தீவிர விசாரணையால், இருபது ஆண்டுகளாக நீடித்ததாக கூறப்படும் அடையாள மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்ட பணி செல்வின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved