Also Watch
Read this
By: Web Team

நடுக்கடலில் தவறி விழுந்து, ஒரு நாள் முழுவதும் உயிருக்கு போராடிய மீனவரை, சக மீனவர்கள் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் ஊரைச் சேர்ந்தவர் முருகன், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடித்து விட்டு, இரவு 8 மணியளவில் கரை திரும்பும் போது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உள்ளார் . மீன்பிடி வலையில் உள்ள பந்து போன்ற மிதக்கும் உபகரணத்தை பிடித்து உயிருக்கு போராடியுள்ளார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் தூத்தங்குழியை சேர்ந்த ஏழு மீனவர்கள், படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது, நடுக்கடலில் முருகன் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்கள் முருகனை மீட்டு, இன்று அதிகாலை படகில் கூத்தன்குழிக்கு அழைத்து வந்தனர். கடலில் தவறி விழுந்து ஒரு நாள் முழுவதும் மீனவர் முருகன் உயிருக்கு போராடிய நிலையில் மற்ற மீனவர்கள், நடுக்கடலில் அவரை உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.