Also Watch
Read this
By: Manigandan Raja

மீன்களை பிடித்த மக்கள் :
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்திலுள்ள ஊதகருப்பு கோவிலுக்கு சொந்தமான கம்பளியான் கண்மாய் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் உள்ள 50 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் விவசாய அறுவடைகள் பணிகள் முடிந்தவுடன் ஆண்டுதோறும், கிராம மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் பெருகி,
விவசாயம் செழிக்க வேண்டியும் இந்த கண்மாயில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கிராமத்தின் சார்பில், சமூக வலைத்தளங்களில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி, அரியூர்பட்டி, தனியாமங்கலம், கீழையூர், கீழவளவு, ஜெயங்கொண்டநிலை, மலம்பட்டி, எட்டிமங்கலம், மற்றும் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே மீன்களை பிடிக்க கண்மாய் கரையில் காத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டு வந்து, வெள்ளை வீசி மீன்களை பிடிக்க அனுமதி அளித்தவுடன் ஒன்று சேர கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள்.
தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, ஊத்தா, வலை மற்றும் கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி, அயிரை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை போட்டி போட்டு பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரிசமமாக கலந்து கொள்ளும் இது போன்ற சமத்துவ மீன் பிடித் திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இதுபோன்ற மீன்பிடித் திருவிழாவில் பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்யாமல் வீட்டில் சமைத்து இறைவனுக்கு படையல் இட்ட பின்பு உறவினர்களுடன் ஒன்றாக சேர்ந்து உண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.