Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட பெரிய கண்மாய் உள்ளிட்ட இடங்களில் சவடு மண் எடுப்பதற்கு வருவாய்த் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், இந்த அனுமதி விதிமுறைகளுக்குப் புறம்பாக, முற்றிலும் வணிக நோக்கோடு பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விதிமீறும் டிராக்டர்கள்:
இப்பகுதியில் வெறும் மூன்று நபர்களின் பெயர்களில் மட்டுமே சவடு மண் எடுக்க உரிமம் பெறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களைப் பயன்படுத்தி சவடு மண் அள்ளி வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சவடு மண்ணை வணிக நோக்கில் விற்கக் கூடாது என்ற கடுமையான அரசு விதிமுறை இருந்தும், அதனை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமன்றி, குறுகிய சாலைகளில் அதிவேகமாகச் சீறிப்பாயும் இந்த மண் அள்ளும் டிராக்டர்கள் மீது காவல் துறையினரும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது:
சவடு மணல் விற்பணையில் ஈடுபடுபவர்களிடமிருந்து பெரும் தொகை கைமாறியுள்ளதால்தான், அதிகாரிகள் யாரும் இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கிறார்கள்" என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்தச் சாலைகளில், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, பேராபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக, வணிக நோக்கில் சவடு மண் அள்ளி விற்பனை செய்பவர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகச் சாலைகளில் அதிவேகமாகப் பறக்கும் வாகனங்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.