Also Watch
Read this
By: Manigandan Raja
நாகை அருகே திமுக நிர்வாகி ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அக்கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்காததால், அந்த நிர்வாகி மேடையில் அமர்ந்து கண்ணீருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். கட்சியில் பட்டியலினத்தவர்கள் வளரக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், ஒன்றிய செயலாளர் சூழ்ச்சி செய்வதாக உடைந்து பேசிய திமுக நிர்வாகி, தனக்கு பைத்தியம் பட்டம் கட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
யாருமே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டி, 108 நாட்கள் விரதமிருந்து 108 பால்குடத்துடன் திருச்செந்தூர் செல்லும் நடைபயணத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஓடாச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இதனை, திமுக கிளை செயலாளர் ஜெய்சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அச்சடித்து மாவட்ட செயலாளர் கௌதமன், ஒன்றிய செயலாளர் மகா.குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழங்கி இருந்தார் ஜெய்சங்கர். இந்நிலையில், பெண்களுக்கு வழங்குவதற்காக சேலைகள் மற்றும் சில்வர் குடத்துடன் மேடையில் காத்திருந்தார். ஆனால், அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த மாவட்ட செயலாளர் கௌதமன், ஒன்றிய செயலாளர் மகா.குமார் உள்ளிட்ட யாருமே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் மனமுடைந்த ஜெய்சங்கர், நலத்திட்ட உதவி பொருட்களோடு மேடையின் நடுவே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கட்சிக்காக உயிரை மட்டும்தான் இழக்கவில்லை
அப்போது, கண்ணீர் வடித்தபடி பேசிய அவர், வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் தங்களை சிறுமைப்படுத்துவதே ஒன்றிய செயலாளர் மகா.குமார்தான் என்றும் கட்சிக்காக தன்மானத்தைகூட பலமுறை இழந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
தனது வீட்டை அடமானம் வைத்துகூட கட்சி நிகழ்ச்சிகளை நடத்த நினைத்துள்ளதாக அழுத ஜெய்சங்கர், முதலமைச்சரை பார்ப்பதற்காக சென்னை சென்றிருந்தபோது தனக்கு பைத்தியம் என பட்டம்கட்டி அவரை பார்க்க விடாமல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆனாலும், தன்மானத்தைவிட தலைவர் மீது பெரும் பற்று வைத்துள்ளதாகவும், கட்சிக்காக உயிரை மட்டும்தான் இழக்கவில்லை எனவும் மனம் உடைந்து பேசினார்.
நாளை நான் உயிரோடு இருப்பேனா?
பட்டியல் இனத்தவர்கள் கட்சியில் வளரக்கூடாது என்பதற்காக ஒன்றிய செயலாளர் தான் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட யாரையுமே நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல் செய்துவிட்டதாக புகார் கூறிய அவர், ஒன்றிய செயலாளர் வீட்டுக்கு சென்றால் தன்னை பார்த்து ஏழரை வருகிறது என்றும் சனியன் வருகிறது என்றும் தரக்குறைவாக பேசுவதாக கவலை தெரிவித்தார். பட்டியல் இனம் என்ற ஒரே காரணத்திற்காக தனது உணர்வைகூட வெளிப்படுத்தக் கூடாது எனக்கூறுவது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய ஜெய்சங்கர், இன்று நான் உயிரோடு இருக்கிறேன் நாளை நான் உயிரோடு இருப்பேனா என தெரியாது என்றும் கண்ணீர்விட்டார்.
விளக்கம் தந்த மாவட்ட செயலாளர்
இதுஒருபுறமிருக்க, நலத்திட்ட உதவிகளை பெற வந்த பெண்களும் நிகழ்ச்சிக்கு யாரும் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து மாவட்ட செயலாளர் கௌதமனிடம் கேட்டபோது, தனது அண்ணன் மகன் கடலில் விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது படத்திறப்பு விழாவில் தான் கலந்து கொண்டதாகவும், அதனால்தான் தன்னால் நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதையும் பாருங்கள் - அரசு பேருந்துகளின் அவலம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved