Also Watch
Read this
ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆண்டுச்சி குளம் கிராமத்தில் தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் நாலு குடம் தண்ணீருக்கு நாள் முழுக்க தள்ளுவண்டி உடன் மக்கள் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வறண்ட பூமியும், வயல் வெளிகளும்
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தில் வைகை மற்றும் குண்டாறு போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், பெரும்பாலான நிலங்கள் வறண்டே காணப்படுகின்றன.

தண்ணீர் பிரச்னை பிரதான பிரச்னையாக உள்ள நிலையில், காவிரி கூட்டு நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

வறட்சி காலங்களில் அதுவும் சவாலே. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டிற்கு வீடு போடப்பட்ட குழாய்கள் வெறும் காட்சி பொருட்களாக மட்டும் உள்ளதால்,பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது.

அவலத்தின் உச்சம்
குறிப்பாக, சிக்கல் பஞ்சாயத்திற்கு உட்பட்டது ஆண்டுச்சி குளம் கிராம மக்களின் நிலை, அவலத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். 800க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இக்கிராமத்திற்கு காவிரி தண்ணீர் மாதத்திற்கு ஒரு தடவை வருவதே பெரிய விஷயம் என்கின்றனர்.

உள்ளூர் நீர் ஆதாரங்களும் அதிகமான உப்புத் தன்மை கொண்டுள்ளதால், அவற்றை குடிக்க முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழலில் இவர்களின் தற்போதைய குடிநீர் ஆதாரமாக இருப்பது ஊரணி மட்டும். இங்குள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆடு,மாடு, நாய்,கொக்கு, குருவி என அனைத்து உயிர்களும் அங்கே தான் தாகம் தீர்த்துக் கொள்கிறது என்பது கூடுதல் கொடுமை.

ஒரு குடம் ரூ.20
காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு தள்ளு வண்டியுடன் தண்ணீர் எடுக்க ஊரணிக்கு கிளம்பி விடுகின்றனர் ஆண்களும், பெண்களும். பாசி படர்ந்த நிலையில் காணப்படும் தண்ணீரை குடங்களில் சேகரித்து சென்று அதை வடிகட்டி, காய்ச்சி சமையலுக்கு பயன்படுத்துவதாக கூறும் மக்கள், கூலி வேலை செய்யும் தங்களால் ஒரு குடம் தண்ணிய 20 ரூபாய் கொடுத்து வாங்க முடியுமா? என கேள்வி எழுப்புகின்றனர்.

உடல் நல பாதிப்பு
தண்ணீர் கேட்டுக் கேட்டு ஓய்ந்து விட்டதாக கூறும் மக்கள், போராட்டமும் மனுக்களும் தங்கள் வலியை சொன்னாலும் அதனை கேட்பதற்கும் தீர்ப்பதற்கும் அரசுக்கோ அதிகாரிகளுக்கு எந்த எண்ணமும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்று அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.

சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் தங்களின் தாகம் தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் அரசுக்கும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம மக்களின் எதிர்பார்ப்பு
மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளான சுத்தமான குடிநீர் மற்றும் முறையான சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்த நிலையில், ஆண்டுச்சி குளம் கிராம மக்களின் தாகம் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.