Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட வேட்டங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் இதுவரை சவுடு மண் என்ற பெயரில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதிப்படைந்ததோடு கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
விதிமுறைகளை மீறி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் சவுடு மண் குவாரிகளை மூட வலியுறுத்தி வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் மயிலாடதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர்.
அதில் வேட்டங்குடி, திருமுல்லைவாசல் கிராமங்களில் சவுடு மண் எடுப்பதற்கு கனிமவளத்துறையில் அனுமதிபெற்ற அளவைவிட பல மடங்கு அதிகமாக சவுடு மண் எடுத்தும், விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரிகளால் விளைநிலங்கள் பாதிப்படைந்து வருகிறது.

குவாரிகளை மூடக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது அதனால் திருமுல்லைவாசல், வேட்டங்குடி கிராமங்களில் விதிமுறைகளை மீறி அனுமதிபெற்ற அளவை விட அதிகமாக மணல்கொள்ளை நடந்து வருகிறது.
இது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து மணல்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்கள் கிராமங்களில் சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மனு அளித்தனர்.
மேலும் தற்போது இயங்கிகொண்டிருக்கும் மணல்குவாரிகளை உடனடியாக நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுடு மண் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து மாலை 4.30 மணிக்கு 3 மணிநேர காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved