Also Watch
Read this
By: Web Team

2ஜி சேவை பெறுவதற்கு திண்டாடி வந்த நிலை மாறி, 5ஜி சேவையை நாட்டின் அனைத்து மாவட்டங்களும் பெறுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான, சிறந்த நேரம் இது. புதுமைகளை இந்தியாவில் உருவாக்குங்கள். நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். ஒரு காலத்தில் 2G தொழில்நுட்பத்தில் சிரமப்பட்ட இந்தியா, இப்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் டேட்டா இணைப்பு வழங்கப்பட்டது.
தற்போது, இணைய வசதிகள் வேகமாக கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். சைபர் மோசடிகளைத் தடுக்க சட்டம் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
சைபர் குற்ற புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஜிபி டேட்டா ஒரு கப் டீயை விட குறைவு. நான் அடிக்கடி டீயின் உதாரணத்தை பயன்படுத்தியே பழகிவிட்டேன்.

நாங்கள் வேகமான சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்துள்ளது. உற்பத்தி முதல் செமிகண்டக்டர் வரை, மொபைல் முதல் மின்னணுவியல் வரை இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட விஷயங்களை நாம் உருவாக்க முடியாது என்று சிலர், மேக் இன் இந்தியா திட்டத்தை கேலி செய்தனர். தற்போது அதற்கு தக்க பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவையை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறோம். இது ஒரு பெரிய உள்நாட்டு வளர்ச்சி.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 6ஜி என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இது இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கிய மைல்கல்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved