Also Watch
Read this
கரூரில், தேர்தல் பரப்புரையின் போது காவல்துறையை வைத்து தவெகவினரை கொன்றது திமுக என்று, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டி உள்ளார். 41 பேரை கொன்றது தொடர்பான கணக்கு வழக்கை தீர்க்காமல் ஓய மாட்டோம் என்றும் உறுதி தெரிவித்தார்.

மாற்றுக் கட்சியினர்...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;

தமிழ்நாடு அரசியல் 2026, அரசியலுக்கு முன்பு, பின்பு என மாறி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் அரசியலால், 75 ஆண்டுகால பண அரசியல், மத அரசியல், சாதி அரசியல் தூக்கி எறியப்பட்டு உள்ளது. அதிமுகவின் 90% பேர், தவெகவில் இணையப் போகிறார்கள்.

ஆட்சியமைக்க போராடினோம்
ஆட்சி அமைப்பதற்கு கடைசி நாள் வரை போராடினோம். இருந்தும் அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான அன்றே, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் ஆகியோர் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிமுகவின் நிறுவனர் யார்? எம்ஜிஆர் எதற்காக கட்சி ஆரம்பித்தார்? ஜெயலலிதா என்ன கூறி அரசியல் செய்தார்? தீய சக்தி திமுக, குடும்ப ஊழலுக்காக உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு என்ன செய்தார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு அதிமுக தொண்டரின் உயிர்நாடியிலும் இருக்கிறது. ஆனால், தான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின், உதயநிதி உடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தியது எவ்வளவு பெரிய துரோகம்.

திமுகவிடம் அடமானம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுகவில் இணைந்ததும், அவரை துரோகி என்றார் இபிஎஸ். கட்சியில் இருந்து விலகிவிட்டு, தனிப்பட்ட முறையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தார். ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ துரோகி என்றவர் இபிஎஸ். ஆனால், ஒட்டுமொத்த கட்சியையும் திமுகவிடம் அடமானம் வைக்கும் போதுதான் உண்மையான விசுவாசிகள் கொதித்தெழுந்தனர். இப்போது எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் மட்டும்தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இபிஎஸ் மகன் வருகிறார்
இப்போதே, இபிஎஸ் மகன் கட்சியை வழிநடத்த வேண்டும், இளைஞரணி தலைவராக வேண்டும் என்று அதிமுகவில் தீர்மானம் போடுகின்றனர். எனது மகன் உறுப்பினர் மட்டும் தான் என்று இபிஎஸ் கூறுகிறார். அரசியல் ஆசை இல்லை என்றால் எதற்கு அவரை உறுப்பினராக வைத்திருக்கிறீர்கள். உதயநிதிக்கு எப்படி ஸ்டாலின் பல்வேறு பொறுப்புகளைக் கொடுத்தாரோ? அதையேதான் தனது மகன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றப் போகிறார்.

எப்போது தேர்தல் வந்தாலும்...
அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் தவெகவில் இணைக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் தலைவர் விஜய் அறிவித்துவிட்டார். அதனால்தான், அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளும் தவெகவை நோக்கி வருகிறார்கள். நாங்கள் 50 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறுகிறார்கள். நாங்கள் எளிமையானவர்கள். எங்கள் அமைச்சர்கள் யாராவது ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூற முடியுமா? தமிழகத்தில் மாற்றம் உருவாகி உள்ளது. எந்த துறையிலும் ஊழல் இல்லை. இன்னொரு தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். நாங்கள் தேர்தலைப் பார்த்து அச்சம் கொள்ளவில்லை. ஆட்சியை வலுப்படுத்த எல்லா இடத்திலும் எங்கள் வியூகம் இருக்கும்.

கரூர் கணக்கு வழக்கு
தவெகவுக்கு கரூர் கணக்கு வழக்கு ஒன்று உள்ளது. அதை முடிக்காமல் விட மாட்டோம். சட்டம் தனது கடமையைச் செய்யும். கரூர் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள். கடைசி 15 நாட்கள் எங்கள் தலைவர் ஏன் பல ஊர்களுக்கு போகவில்லை? அதற்கு காரணம் உள்ளது. எந்த இடத்தில் காவல்துறை ஆதரவு இருந்ததோ, அங்கு மட்டும்தான் அவர் பிரச்சாரத்துக்குச் செல்ல முடிந்தது. நிறைய மாவட்டங்களில் காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் அவர் செல்லவில்லை. இந்த கேவலமான அரசியலை செய்தது திமுக. அதனால்தான், கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த இளைஞர்களும் தாய்மார்களும் விஜய் பின் ஒன்று திரண்டார்கள்.

தவெக பரம எதிரி திமுக
கரூர் கண்ணீருக்கு காரணமாக இருந்த பாவத்துக்காகத் தான் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்தார். தோல்விக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் சிந்திய கண்ணீர், கரூர் மக்களின் கண்ணீர். உங்கள் குடும்பத்தில் நீங்கள்தான் கடைசி முதல்வர் என்பதை மு.க.ஸ்டாலின் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு லண்டன் சென்று செட்டில் ஆக வேண்டியது தான், கிளம்பி விடுங்கள். கரூர் சம்பவத்துக்குப் பிறகு எங்கள் பரம எதிரி திமுக தான். செந்தில் பாலாஜி மூலம் தவெக எம்எல்ஏவுக்கு பணம் கொடுக்க முயன்றது உட்பட எல்லா திருட்டு வேலைகளையும் திமுக செய்தது.

ஊழலற்ற ஆட்சி
தவெக நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் உள்ளது. உண்மையான கொள்கையுடன் செயல்படக்கூடிய கட்சி தவெகதான். இதற்காக நேர்மையான அரசியலை முன்னெடுக்க அனைவரும் உறுதியாக உள்ளோம்.
அந்தந்த தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை நிம்மதியாக செய்ய வேண்டும். லஞ்சம், ஊழலால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. ஊழல் இல்லாத ஆட்சியை தவெக வழங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் பேசினார்.