Also Watch
Read this
கடன் தள்ளுபடி, மேகதாது விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டு விவசாயிகளை தவெக அரசு வஞ்சிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். முதலமைச்சர் விஜய் கர்நாடகத்திற்கு செல்லும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தஞ்சையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

விவசாயிகளுக்கு வேதனை
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப்போக்கு, மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்துதல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு.

உதயநிதி தலைமையில்...
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
முதலமைச்சர் மவுனம்

கர்நாடகாவுக்கு போக கூடாது
ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்வதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? முதலமைச்சரின் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன.

தயாராகவே இருக்கிறோம்
மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் கூறி விடுங்கள், அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

டெல்டா மண்ணில் போராட்டம்
இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும். விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 3ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.